காஞ்சியில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைக்குழுக்களுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற கலை சங்கமம் நிகழ்ச்சியில், 4 கலைக்குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து, 20 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். பின்னர், கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது: தமிழக அரசால் 1955ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடக தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ம் ஆண்டில், கலைஞரால் தமிழ்நாடு இயல, இசை, நடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு ‘இசைச் சங்கமம்’ மற்றும் ‘கலைச் சங்கமம்’ கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், கலெக்டரால் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியின் கலை விழா மற்றும் கலை திருவிழாக்கள் நடத்துதல் போன்ற சீர்மிகு கலைப்பணிகளை மன்றம் செயற்படுத்தி வருகிறது. கலைஞரால் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை 35 மாவட்டங்களில் கொண்டாடும் வண்ணம், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 35 மாவட்டங்களில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ‘கலைச் சங்கமம்’ விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கலை சங்கமம் விழா 35வது மாவட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், அண்ணா நூற்றாண்டு விழா நினைவு பூங்காவில் ஆர்.துர்காதேவி குழுவினர் வழங்கும் ‘கிராமியப் பாடல்கள்’ மாசிலாமணி குழுவினர் வழங்கும் ‘கைச்சிலம்பாட்டம்’, தேவராஜன் குழுவினர் வழங்கும் ‘புலியாட்டம், காளியாட்டம்’ சந்திரன் குழுவினர் வழங்கும் ‘தெருக்கூத்து’ ஆகிய 4 கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைக்குழுக்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் 4 கலைக்குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன. கலை சங்கமம் விழா கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நிகழ்த்தப்பட்டு நிறைவு பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஒன்றிய அளவில் மட்டுமல்ல உலகளவில் தலை சிறந்த கலை நிறுவனமாக செயல்படும் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், விழா ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி ராஜநிதி, கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சியில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைக்குழுக்களுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: