10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்/காரியாபட்டி, பிப்.23: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் நரிக்குடி ஒன்றிய ஆணையாளர் மற்றும் பொறியாளரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை திரும்ப பெற கோரி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் வெளிநடப்பு போராட்டம் செய்தனர். வருவாய்துறை அலுவலர்கள் சங்க வட்டத்தலைவர் ஷியாமளா தலைமையில் செயலாளர் சேரலாதன் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: