கோட்டாட்சியரிடம் மனுவுடன் ₹10 ஆயிரம் கொடுத்த குவாரி மேலாளர் கைது குடியாத்தத்தில் விவசாய நிலத்தில் மண் எடுக்க

குடியாத்தம், பிப்.23: குடியாத்தத்தில் விவசாய நிலத்தில் மண் எடுக்க கோட்டாட்சியரிடம் மனுவுடன் ₹10 ஆயிரம் கொடுத்த தனியார் குவாரி மேலாளரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (40). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்குவாரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மோகனின் உறவினருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மண் எடுப்பதற்காக, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியிடம் நேற்று இரவு மனு அளித்தார். அப்போது அவர் மனுவுடன் ₹10 ஆயிரத்தை கவரில் வைத்து கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோட்டாட்சியர் உடனே குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் மோகனை கைது செய்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கோட்டாட்சியரிடம் மனுவுடன் ₹10 ஆயிரம் கொடுத்த குவாரி மேலாளர் கைது குடியாத்தத்தில் விவசாய நிலத்தில் மண் எடுக்க appeared first on Dinakaran.

Related Stories: