மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு போல் இல்லாமல் கோவையில் கலைஞர் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்: பாஜ எம்எல்ஏவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு சட்டப் பேரவையில், பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை நூலகம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நேற்றையதினம் விவாதத்தின் போது சில குறிப்பிட்ட உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், பாரதிய ஜனதா உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து விட்டு, அது எங்கே அமையவிருக்கிறது, எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும்.

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

The post மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு போல் இல்லாமல் கோவையில் கலைஞர் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்: பாஜ எம்எல்ஏவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Related Stories: