வீட்டின் பூட்டு உடைத்து நகை, ₹3 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, பிப். 18: பேரணாம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ₹3 லட்சம், 2சவரன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(48). இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், சரவணன் நேற்று முன்தினம் வீடு, கடையை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு அனைவரும் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்றுபார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க செயின், ₹3 லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், பீரோ மீது வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூவரசன் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிைகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டின் பூட்டு உடைத்து நகை, ₹3 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: