ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 35வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 35வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 450 மாணவ மாணவிகள் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் திருநின்றவூர் காந்தி சிலை அருகே பட்டாபிராம் போக்குவரத்து ஆய்வாளர் பாபு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி திருநின்றவூர் லட்சுமி திரையரங்கம், மார்க்கெட் பகுதி வழியாக பள்ளி வரை சென்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பாதாகைகளை கையில் ஏந்தியபடி 5 கிலோ மீட்டர் வரை நடைபயணமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்பு மாணவ, மாணவிகளிடம் போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு குறித்து பேசுகையில், மாணவ மாணவிகள் அனைவரும் பெற்றோர், உறவினர்களிடம் வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களின் தகவல்களை கூற வேண்டும். கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்கள் ஓட்டிச் செல்லும்போது கைப்பேசி உபயோகிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என்றார். பின்னர் பல்வேறு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: