திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

திருப்பூர்: திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என திருப்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருப்பூரில் ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில், திட்டப்பணிகளை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

திருப்பூரில் 4வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என திருப்பூரை மையமாக வைத்து தான் சொல்லி இருக்கிறார்கள். நான் உட்பட முதல்வர் பயன்படுத்தும் பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் தான். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்.

நாம் ஒன்றிய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.
திராவிட இயக்கம், திராவிட மாடல் அரசு அன்றன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கி உள்ளோம்.

மகளிருக்கு உதவித்தொகை, அரசு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதை தொடர்ந்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.பல கோடி மதிப்பில் நலத்திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், எம்.பிக்கள் ஆ.ராசா, சுப்பராயன், சண்முகசுந்தரம், செல்வராஜ் எம்எல்ஏ, மேயர் தினேஷ்குமார், நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழகம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: