காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு ரூ.25 லட்சம் புத்தொழில் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு ரூ.25 லட்சம் புத்தொழில் நிதியுதவி வழங்கப்பட்டதையடுத்து மதிப்புக் கூட்டப்பட்ட மலையகத் தேன் விற்பனை மூலம் கன்னியாகுமரி மாவட்ட பழங்குடி மக்களை முன்னேற்றும் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி.புத்தொழில் நிதித் திட்டம் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் காணி பழங்குடி மகளிர் குழுவின் தேன் விற்பனைக்காக ரூ.25லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கியது.

இந்த ரூ.25 லட்சம் நிதி உதவி மூலம் காணி பழங்குடி மகளிர் குழு நாஞ்சில் காணி மகளிர் கிரியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தை நடத்துகிறது. இந்த நிறுவனம் பழங்குடி மக்களிடம் இருந்து தேன் மற்றும் மிளகு ஆகியவற்றின் கொள்முதலை அதிகரிக்கவும், விற்பனைக்காக அதன் பேக்கேஜிங் பிரிவு ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. காணி பழங்குடி மகளிர் குழு, தற்போது இஞ்சி, மிளகு, முருங்கை ஆகியவற்றின் மணம் வீசக்கூடிய, தனித்துவமான மதிப்புக் கூட்டப்பட்ட தேன் விற்பனையை ஒரு சிறிய வாடிக்கையாளர் தளத்தின் மூலம் செய்துவருகிறது.

மேலும், இணையதளத்தின் மூலம் இந்த தேன் விற்பனையை அதிகரித்திடவும் ஆவன செய்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் உதவியால், பழங்குடி இன மக்களிடம் இருந்து தேன், இஞ்சி, மிளகு முதலியவற்றின் கொள்முதலை அதிகரித்தும் விற்பனையைப் பெருக்கியும் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காணி பழங்குடி மகளிர் குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றியுடன் போற்றி வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு ரூ.25 லட்சம் புத்தொழில் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: