கிராமி விருது வென்றது இந்தியாவின் சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி இசைக்குழு’!!

வாஷிங்டன் : இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழு கிராமி விருது வென்றுள்ளது. திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. அமெரிக்காவை சேர்ந்த ‘தி ரெக்கார்டிங் அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் கிராமி இசை விருதுகள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் இசைத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த ஆண்டுக்கான 66வது கிராமி விருது வழங்கும் விழா பிப்ரவரி 4-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் சக்தி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்ற ஆல்பத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 8 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. விருதுக்கு பின் பேசிய சங்கர் மகாதேவன் “கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. நாங்கள் இந்தியாவை நினைத்து பெருமை கொள்கிறோம். எனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் ” என்று நெகிழ்ச்சியாக பேசினார். இசையமைப்பாளர் செல்வகணேஷ் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘துரோகி’, ‘நில் கவனி செல்லாதே’,’குள்ளநரிக் கூட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கிராமி’ விருது கிடைத்தது.

The post கிராமி விருது வென்றது இந்தியாவின் சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி இசைக்குழு’!! appeared first on Dinakaran.

Related Stories: