பைக் மீது கார் மோதி மளிகை கடைக்காரர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், மளிகைக் கடைகாரர் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (44). இவர், அதே பகுதியில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், பாலமுருகன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான ரமேஷ் (44) என்பவருடன், அய்யம்பேட்டை பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாலமுருகன், ரமேஷ் ஆகிய இருவரும் அய்யங்கார் குளம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரில் அதிவேகமாக வந்த சொகுசு கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 50 மீட்டர் தூரம் வரை பைக் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த பாலமுருகன், ரமேஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த, அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி மளிகை கடைக்காரர் பலி appeared first on Dinakaran.

Related Stories: