திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் 2 நாட்கள் நடைபெற்ற அனல் பறக்கும் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி: வெற்றி பெற்ற சேவல்களுக்கு பரிசு

 

திருவள்ளூர், ஜன. 29:திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தங்கானூர் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் காவல் துறை கண்காணிப்பில் சேவல் சண்டை போட்டியை நடத்த அனுமதித்தது இதனையடுத்து, தங்கானூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காலை சேவல் சண்டை போட்டி உற்சாகமாக தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேவல் உரிமையாளர்கள் தங்கானூர் கிராமத்தில் குவிந்ததால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டது.

இந்தப் போட்டியில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் பங்கேற்க இருந்ததால் 120 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த சேவல் சண்டை போட்டியில் 3 ஆயிரம் சேவல்கள் கலந்து கொண்டன. அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்த சின்னத்தம்பியின் 40 சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டதில் 18 சேவல்கள் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

கடலூர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் 25 சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டதில் 12 சேவல் வெற்றி பெற்று 2வது பரிசை தட்டிச் சென்றது.  சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஜாகீர் என்பவரின் 23 சேவல்களில் 11 சேவல்கள் வெற்றி பெற்று 3 வது பரிசை பெற்றது. இதில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு அரை கிராம் தங்க நாணயமும், சமநிலை அடைந்த சேவல்களுக்கு கேஸ் ஸ்டவ் அடுப்பும் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 நாட்கள் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியை முன்னிட்டு திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி அனுமந்தன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் 2 நாட்கள் நடைபெற்ற அனல் பறக்கும் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி: வெற்றி பெற்ற சேவல்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: