துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று மாலை புதுவை வருகை

புதுச்சேரி: இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு மாலை 5.15 மணிக்கு வந்தடைகிறார். பின்னர் நீதிபதிகள் தங்கும் விருந்தினர் இல்லத்துக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 6.45 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விக்‌ஷித் பாரத்-2047 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். பின்னர் நீதிபதி விருந்தினர் இல்லம் வந்து ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து நாளை (29ம் தேதி) காலை 7 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்லும் அவர், அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னை வழியாக டெல்லி செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், மத்திய பல்கலைக்கழகம், நீதிபதிகள் தங்கும் விருந்தினர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று மாலை புதுவை வருகை appeared first on Dinakaran.

Related Stories: