நாமக்கல்லில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், நாமக்கல்லில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அண்ணாதுரை, மாதேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட, 12 கோரிக்கைகள் மீது உடனடியாக உத்தரவு வெளியிட வேண்டும். தொடக்கக்கல்வி துறையில் பணி புரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: