மேகதாது அணை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் கர்நாடகாவை ஒன்றிய அரசு எச்சரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் கர்நாடக அரசை, ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணைக்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

இந்த முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க ஒன்றிய அரசு அளித்த அனுமதி தவறு, அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது. இது தெரிந்தும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்.

The post மேகதாது அணை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் கர்நாடகாவை ஒன்றிய அரசு எச்சரிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: