பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பெரியபாளையம், பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2023-24ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 8 கோயில்களில் நடந்து வருகிறது. இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி மற்றும் கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும்.
கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை 523 கோயில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

The post பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: