சிவன்மலை கோயிலில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம்

 

காங்கயம், ஜன. 20: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த்திருவிழாவையடுத்து நாளை கொடியேற்றம் (20ம் தேதி) நடைபெற உள்ளது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழாவுடன் நிகழ்சிகள் துவங்கியது. இன்று (20ம் தேதி) காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும், 12 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்ற நிகழ்சியும் நடக்கிறது.

பின்னர் சப்பாரத்தில் மலையை வலம் வந்து, 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோயில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். 25ம் தேதி காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது. 26, 27, தேதிகளில் மலையை வலம் வரும் தேர் 28ம் தேதி நிலை அடைகிறது. தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post சிவன்மலை கோயிலில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: