வாகராயம்பாளையம் பள்ளியில் மாலை நேர சிற்றுண்டி திட்டம்

 

கோவை, ஜன.20: கோவை சூலூர் வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1,220 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2-வில் மொத்தம் 354 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பள்ளியில் மாலை 6.30 மணி வரை சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். மேலும், மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு வகுப்பில் படிக்கும் 354 மாணவ, மாணவிகளுக்கும் மாலை நேர சிற்றுண்டி திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளியின் நலவிரும்பிகள் என அனைவரின் முயற்சியால் இத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில், சிறப்பு வகுப்புகள் தற்போது துவங்கப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களுக்கான மாலை நேர சிற்றுண்டி திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் மோப்பரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிகுமார், தலைமை ஆசிரியர் செந்தில்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரத்தினம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டம் காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

The post வாகராயம்பாளையம் பள்ளியில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: