ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பழநியில் கடையடைப்பு போராட்டம்


பழநி: பழநியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சன்னதி வீதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூசம், பங்கு உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி என ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடக்கும். வருடத்திற்கு சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் அடிவாரப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தவதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இப்பணியை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது.

இதன்பேரில், கடந்த வாரம் பழநி கோயில் அடிவாரப் பகுதியில் கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனிடையே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என நகராட்சி மீண்டும் அறிவித்தது. கடைகள் அகற்றப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், பழநி அடிவாரம் சன்னதி வீதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இதனால், எப்போது பரபரப்பாக இருக்கும் சன்னதி வீதி வெறிச்சோடியது.

The post ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பழநியில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: