சில்லரை வியாபாரிகள் வராததால் கோயம்பேட்டில் 10 டன் பூக்கள் தேக்கம்

சென்னை, ஜன. 18: கோயம்பேடு சிறப்பு சந்தை நேற்றுடன் நிறைவு பெற்றது. காணும் பொங்கலையொட்டி, புறநகர் சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வராததால் 10 டன் பூக்கள் நேற்று விற்பனை ஆகாமல் தேங்கியது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 11ம் தேதியில் இருந்து 17ம் தேதி (நேற்று) வரை சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு சந்தையில் கரும்பு மற்றும் இஞ்சி, மஞ்சள் கொத்து லோடு லோடாக வந்து குவிந்தன. பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதேபோல், காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான சிறப்பு காய்கறிகளான சேனைக்கிழங்கு, வெற்றிலை கிழங்கு, கருணைக்கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, நெய், அரிசி, வாழைத்தார் மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரம் அமோகமாக நடந்தது. மேலும் சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து கரும்பு மற்றும் மஞ்சள், இஞ்சி கொத்துகள் அதிகமாக வந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபட்டனர். எனவே, எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் ஏற்படமால் சிறப்பு சந்தை நடந்து முடிந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) மாலையுடன் சிறப்பு சந்தை நிறைவு பெற்றது. சிறப்பு சந்தையில் கடந்த 7 நாட்களில் வியாபாரிகளுக்கு அனைத்து சலுகைகளும் அங்காடி நிர்வாகம் சார்பில் அமைத்து தரப்பட்டது. இந்த வருட பொங்கல பண்டிகை சிறப்பாக நடந்தது. எனவே, ஒத்துழைப்பு கொடுத்த அங்காடி நிர்வாக குழு மற்றும் போலீசாருக்கு பாராட்டுக்கள்’’ என்றனர். இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி 3,700க்கும் ஜஸ்மல்லி 3,000க்கும் முல்லை 1,800க்கும் ஜாதிமல்லி 1,500க்கும் காட்டுமல்லி 2,500க்கும் கனகாம்பரம் 1,200க்கும் சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் 120க்கும், சம்பங்கி 140க்கும் சாக்லேட் ரோஸ் 160க்கும் அரளி பூ 300க்கும் விற்பனையானது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 2,300க்கும் ஐஸ் மல்லி 2,000க்கும் காட்டுமல்லி மற்றும் முல்லை 1,000க்கும் கனகாம்பரம் 700க்கும் ஜாதிமல்லி 600க்கும் சாமந்தி 60க்கும் சம்பங்கி 40க்கும் அரளி பூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், சில்லரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வராததால் பூக்களின் வியாபாரம் மந்த நிலை ஏற்பட்டது. சுமார் 10 டன் பூக்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.

The post சில்லரை வியாபாரிகள் வராததால் கோயம்பேட்டில் 10 டன் பூக்கள் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: