வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ₹18.37 லட்சம்

பெரும்புதூர், ஜன.13: வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இதில், ₹18.37 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில்  சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. தற்போது, 3 மாதங்களுக்குப்பிறகு நேற்று முன்தினம் கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் உள்பட 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், 9 நிரந்தர உண்டியல்களில் ₹14.13 லட்சம் பணம், 64 கிராம் தங்கமும், 926 கிராம் வெள்ளியும், திருப்பணி உண்டியலில் ₹4,24 லட்சம் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது. இந்த உண்டியல்கள் திறப்பில், சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, உண்டியல் காணிக்கை தொகையினை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வின்போது, கோயில் செயல் அலுவலர்கள் வஜ்ஜிரவேலு, சுரேஷ், செந்தில்குமார், வாலாஜாபாத் சரக ஆய்வர் திலகவதி, கிராம நிர்வாகிகள் செந்தில்தேவராஜ், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ₹18.37 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: