பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை தொடர்ந்து எழுந்த சர்ச்சை.. இந்தியா வர மாலத்தீவு அதிபர் முடிவு.. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டம்!!

டெல்லி : பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளை உருவாக்கி உள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது, ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி. அந்த படங்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்தார். லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் பிரமிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

மோடியின் லட்சத்தீவு பயணத்தை இழிவுபடுத்தி மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழத் தொடங்கியது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், சர்ச்சை கருத்துகளைக் கூறிய அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப், மஹ்சூம் மஜித் ஆகியோரை தற்காலிக பதவி நீக்கம் செய்து அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டார்.மேலும் இந்தியாவுக்கான மாலத்தீவு தூதரை அழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ‘’மாலத்தீவை புறக்கணியுங்கள்’’ ஹேஷ்டேக் வைரலானது. இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஓட்டல்கள் புக்கிங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இம்மாத இறுதியில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் மூலம் இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை தொடர்ந்து எழுந்த சர்ச்சை.. இந்தியா வர மாலத்தீவு அதிபர் முடிவு.. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: