திருப்புவனம் அருகே முள் படுக்கையில் நின்ற படி பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பெண் சாமியார் முள் படுக்கையில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை பெண் சாமியார் நாகராணி அம்மையாரும், மாரிமுத்து சுவாமிகளும் நிர்வகித்து வருகிறன்றனர்.

இந்த கோயிலில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து மார்கழி 18ம் தேதி முள் படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம். 47ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த கார்த்திகை 1ம் தேதி நாகராணி அம்மையார் காப்பு கட்டி விரதத்தைத் துவக்கினார்.

48ம் நாளான நேற்று கோயில் வாசலில் கருவை, உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. பெண் சாமியார் கோயில் வளாகத்தில் உள்ள முத்துமாரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பெண் பக்தர்கள் கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்டனர்.

பின்னர் முள் படுக்கைக்கு பூசாரி மாரிமுத்து சுவாமிகள் பூஜை செய்து, பெண் சாமியார் நாகராணி அம்மையாரை முள்படுக்கைக்கு அழைத்து வந்தார். அருள் வந்து ஆடியபடியே வந்த பெண் சாமியார் முள் படுக்கையில் ஏறி நின்று ஆடியபடியே பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். சற்று நேரத்தில் மயங்கியபடியே முள் படுக்கையில் படுத்தார். மூன்று மணிநேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.

The post திருப்புவனம் அருகே முள் படுக்கையில் நின்ற படி பெண் சாமியார் அருள்வாக்கு appeared first on Dinakaran.

Related Stories: