ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் 58வது ஆண்டு காவல்துறை மாநாடு: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் காவல்துறை இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிபிகள்) மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் (ஐஜிபிகள்) 58வது ஆண்டு மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.முன்னதாக ஆண்டுதோறும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் நிலவும் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து அதில் ஆலோசனை நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், ஒன்றிய அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்.கடந்த 2013-ம் ஆண்டு வரை, இந்த மாநாடு டெல்லியிலேயே நடந்து வந்தது. 2014-ம் ஆண்டு, மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இதர நகரங்களில் நடைபெற தொடங்கியது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாடு ஜெய்ப்பூரில் நடக்கிறது.நாளை தொடங்கும் இந்த மாநாடு பல்வேறு அமர்வுகளாக கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டில் உரையாற்றுவதுடன், அதற்கு முன்பாக போலீஸ் அதிகாரிகளுடன் அவர் உரையாடுகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநாடு முழுவதும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் அந்தஸ்தில் உள்ள 250 அதிகாரிகள் நேரடியாக மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 200-க்கு மேற்பட்ட இதர அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.டிஜிபி-ஐஜிபி மாநாட்டில் வல்லுநர்கள் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவாதத்தில் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, குற்றவியல் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்பு, சமூக ஊடகங்களின் பங்கு, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத குற்றங்கள், மாபியா மற்றும் கும்பல் போர்கள் மற்றும் போலீஸ் துறையின் சமீபத்திய வளர்ச்சி ஆகியவை அடங்கும் என்று தெரிகிறது. டிஜிபிக்கள் மற்றும் ஐஜிபிக்களின் மூன்று நாள் கூட்ட நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசும், மாநில காவல்துறையும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

The post ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் 58வது ஆண்டு காவல்துறை மாநாடு: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: