நெகிழி இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர், டிச.30: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட பயன்படுத்தி செயல்படுத்தி. தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் 2 இணைப்புகள் தனிநபர் நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 1.05.2024 ஆகும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெகிழி இல்லாத பள்ளி, கல்லூரிகளுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: