தமிழகத்தில் முதன்முறையாக எச்ஐவி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் கருவி: மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம்

சென்னை, டிச.28: எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் உலக எய்ட்ஸ் தினம் 2023 நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாட்டில் முதன்முறையாக எச்.ஐ.வி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனம் மற்றும் எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்புகளின் சேவையினை பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்ற கருப்பொருள் அடங்கிய குருந்தகடு மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வெளியிடப்பட்டது. அத்துடன் மாநில அளவில் நடந்த வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், கூட்டமைப்புகளின் சேவையை பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட வைரஸ் காய்ச்சல் தொடர்பாக 56 மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வந்துள்ளது. இதில் எக்ஸ்பிபி (XBB) என்கின்ற வைரஸ் 24 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதில் ஜே.என் 1 (JN.1.1) என்கின்ற வைரஸ் 4 நோயாளிகளிடம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நான்கு பேரும் திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள். சிங்கப்பூரில் கூட 3 நாட்களுக்கு மட்டுமே இந்த வைரஸ் பாசிட்டிவ் என்று வருகிறது, 4ம் நாள் நெகட்டிவ் என்று வருவதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதனால் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் முதன்முறையாக எச்ஐவி மற்றும் பால்வினை தொற்று கண்டறியும் கருவி: மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: