ஜெயங்கொண்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா

 

ஜெயங்கொண்டம், டிச.27: அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில்அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஜெயங்கொண்டம் ராயல் சென்டினல் லயன்ஸ் சங்கம், அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் இணைந்து சிறுதானிய உணவு திருவிழா மற்றும் யோகத்தான் நிகழ்ச்சியும் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி வரவேற்றார்.

அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி லயன் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் சிறுதானியங்கள் கொண்டு உணவு தயாரித்து சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினர். சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் நர்சிங் கல்லூரி மாணவிகள்ஆகியோர் சிறுதானிய உணவு வகைகளான கம்பு கேழ்வரகு திணை வரகு சாமை குதிரைவாலி சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு பல்வேறு சுவைகளில் உணவு வகைகளாகவும் கஞ்சி பாயாசம் அடை முறுக்கு வடை கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை செய்திருந்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இவைகளை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் சுவைத்து பார்த்து மாணவிகளையும் அங்கன்வாடி பணியாளர்களையும் பாராட்டினர் சிறந்த சிறு தானிய வகைகளை தயாரிக்கும் போட்டி மாணவிகளுக்கு வைக்கப்பட்டது. போட்டி என்பதால் பல வகைகளில் மாணவிகள் உணவு பதார்த்தங்களை செய்து எடுத்து வந்திருந்தனர்.மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் முன்னிலையில் ஊட்டச்சத்து உறுதி மொழியை மாணவிகள் அனைவரும் ஏற்றனர். முன்னதாக கல்லூரி மாணவிகளுக்கான யோகா பயிற்சியை பேராசிரியை மாலதி மற்றும் குமாரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: