தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நிவாரண பணிகளுக்கு ஒன்றிய அரசு போதிய நிதி அளிக்க வேண்டும்: முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், கடந்த நூறாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ந்து இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. மிக்ஜாம் புயல் பாதிப்புகளோடு, அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது.

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மூத்த அதிகாரிகள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தற்போதைய நிலையையும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய 72 பக்க விரிவான கோரிக்கை மனுவையும் அளித்து, இப்பேரிடரை எதிர்கொண்டு, நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களின் தேவையை வலியுறுத்தினர்.

மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனை விடப் பன்மடங்கு மிகுதியாக உள்ளன. எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்தச் சவாலான சூழ்நிலையைத் தமிழ்நாடு எதிர்கொள்ளப் போதிய நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

The post தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நிவாரண பணிகளுக்கு ஒன்றிய அரசு போதிய நிதி அளிக்க வேண்டும்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: