பாலக்காடு அருகே பைக் மீது கார் மோதல்: தலை துண்டாகி மீன் வியாபாரி பலி

*35 மீட்டர் தொலைவிற்கு சிதறி கிடந்த உடல் பாகங்கள்

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு அருகே அசுர வேகத்தில் வந்த கார், பைக் மீது மோதியதில் மீன் வியாபாரி தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பாகங்கள் 35 மீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சிற்றூர் நல்லேப்பிள்ளி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். அவரது மகன் மணிகண்டன் (43). மீன் வியாபாரி. மணிகண்டன் தினமும் பைக்கில் சென்று வீதி வீதியாக மீன்களை விற்பனை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் இவர் மீன்களை ஏற்றிக்கொண்டு புதுநகரம் பகுதியிலிருந்து சிற்றூரை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அம்பாட்டுபாளையம் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அசுர வேகத்தில் வந்த ஒரு கார், மணிகண்டனின் பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டார். விபத்து குறித்து அறிந்ததும் அப்பகுதியினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மோதிய இடத்தில் பைக் கிடந்த போதும் மணிகண்டனை காணவில்லை. சுமார் மூன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் 35 மீட்டர் தொலைவில் மணிகண்டனின் உடல், தலை மற்றும் பாகங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சிற்றூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் மீது மோதிய காரில் இருந்தவர்கள் அருகில் விளையோடி என்ற பகுதியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பாலக்காடு அருகே பைக் மீது கார் மோதல்: தலை துண்டாகி மீன் வியாபாரி பலி appeared first on Dinakaran.

Related Stories: