முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் மறைவெய்தியதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில் 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தை 1999ல் ஒடிசா மாநில ஆளுநராக இருந்த போது அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதில் மாநில அரசுடன் இணைந்து முக்கியப் பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த போது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989ல் கலைஞர் முதலமைச்சரான பின்னும் தொடர்ந்து பணியாற்றினார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: