திருக்காட்டுப்பள்ளி அருகே பைக் மீது மாடு மோதியதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலி

திருக்காட்டுப்பள்ளி, டிச.22: திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்கின் மீது மாடு மோதியதில் படுகாயமடைந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பூதலூர் காங்கேயர் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (51). இவர் கடந்த 19ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது விண்ணமங்கலம் என்ற இடத்தில் செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த மாடு எதிர்பாராத விதமாக பைக்கில் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் படுகாயமடைந்தார். அவருக்கு பூதலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செந்தில்குமார் மனைவி ராஜேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே பைக் மீது மாடு மோதியதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: