புதுடெல்லி: காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசேர்த்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. 2019 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவு அரசியல் சட்டப்படியான ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே அல்லாமல், ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மக்களின் துயரங்களைப் போக்க பாடுபடவேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். பிரிவுகள் 370, 35 (ஏ) ஆகிய சொற்கள் இதற்கு மிகப்பெரும் தடைகளாக இருந்தன. இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்கள் பெறுகின்ற உரிமைகளையும், வளர்ச்சியையும் ஜம்மு, காஷ்மீர் மக்கள் பெறமுடியவில்லை. ஒரே தேசத்தின் மக்களிடையே பாகுபாடுகள் ஏற்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை நமது நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலிருந்து ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பு 2023 டிசம்பரில் வந்துள்ளது. ஆனால் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அணிவகுப்பைக் கண்டுள்ளன.
ஒன்றிய அரசின் திட்டங்கள் கிட்டதட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் சக்திகளாக இருக்கவே விரும்புகிறார்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது வரையறுத்துள்ளது. இப்போது மக்களின் கனவுகள் கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல் எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றிற்கு மாற்றாக வளர்ச்சி, ஜனநாயகம், கண்ணியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
The post ஒரே பாரதம் கொள்கைக்கு வலுசேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு: பிரதமர் மோடி அறிக்கை appeared first on Dinakaran.
