வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் லட்சதீப விழா

 

வில்லியனூர், நவ. 27: வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் லட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்ச தீபவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கோயில் கோபுரம், குளக்கரை மற்றும் கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் அகல் விளக்குகளால் லட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

அப்போது கோயில் தீப ஒளியில் மிளிர்ந்து கண்கொள்ளா காட்சியாக இருந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாலை 6.20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் நான்கு மாடவீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பொழுதுபோக்கிற்காக மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, பரதநாட்டியம், குழுநடனம், தனித்திறமை, திருக்குறள் ஒப்புவித்தல், தேவராம், திருவாசகம், பெரியபுராணம் முற்றோதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலர் திருக்காமீஸ்வரன் தலைமையில் சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் லட்சதீப விழா appeared first on Dinakaran.

Related Stories: