மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ? : ஆளுநர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

டெல்லி : ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதிப்பதாகவும் மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே மாநில ஆளுநர் முட்டுக்கு கட்டையாக இருப்பதாகவும் அரசு சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என்றும் ஆளுநர் புரோஹித் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ள மசோதாக்களில் நிதி மசோதாவும் அடங்கும் என்று வாதிட்டுள்ள பஞ்சாப் அரசு, பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும்.ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ?.அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு ஆளுநர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர், அம்மசோதாவை ஆய்வு செய்யவும் அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவிடப்படுகிறது. பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ? : ஆளுநர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: