வேப்பூர் அருகே துணிகரம் வீடு புகுந்து 30 சவரன் நகை, பணம் திருட்டு

வேப்பூர், அக். 31: வேப்பூர் அடுத்த வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பநாதன் மனைவி பிரேமா (42). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பிரேமா வண்ணாத்தூர் கிராமத்தில் பழைய வீட்டில் வசித்து வருகிறார். தற்போது வண்ணாத்தூரிலிருந்து நல்லூர் செல்லும் சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதனால் அடிக்கடி புதிதாக கட்டும் வீட்டில் சென்று இரவில் தங்கிக்கொள்வார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பழைய வீட்டை பூட்டிவிட்டு துணிப்பைக்குள் சாவியை வைத்து ஆணியில் மாட்டிவிட்டு புதிய வீட்டிற்கு சென்று படுத்துள்ளார். மறுநாள் காலையில் பழைய வீட்டிற்கு சென்றபோது துணிபஙபை வழக்கம்போல் இல்லாமல் இடம் மாறி இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டினுள் சென்று பீரோவை பார்த்தபோது பீரோ திறந்து இருந்தது.

அதிலிருந்த துணிகள் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து பீரோவினுள் பார்த்தபோது அதிலிருந்த, 30 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் திட்டக்குடி டி.எஸ்.பி. காவியா தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் கண்காணிப்பில் கை ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதால் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வேப்பூர் அருகே துணிகரம் வீடு புகுந்து 30 சவரன் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: