கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

ராஜபாளையம், அக்.16: ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில் ராஜா முன்னிலை வகித்தார். இம்முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு சினைப்பை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் ஆடு, மாடுகளை சிறப்பாக பராமரித்து ஆரோக்கியமாக வளர்த்து வரும் விவசாயிகளை தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வில்லிபுத்தூர் கால்நடை துறை உதவி இயக்குனர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்து, ஆடு மாடுகள் வளர்ப்பது குறித்தும் கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

கால்நடைத்துறையை சார்ந்த மருத்துவர்கள் துரை மாஸ்கோ, மலர், சுந்தர்ராஜ், தமிழரசன் உட்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மழைக்காலம் நீடித்து வருவதால் கால்நடை வளர்ப்போர் சிறு சிறு உபாதைகளுக்கு தாங்களாகவே சிகிச்சை அளிக்காமல் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளை பயன்படுத்துமாறு விருதுநகர் மண்டல கால்நடை துறை சார்பில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போர்க்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

 

The post கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: