திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

திருவள்ளூர், அக். 15: 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற திருவள்ளூரில் உள்ள  வைத்திய வீரராகப் பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வதும் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் வழக்கம். அதிலும் குறிப்பாக மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் கோயிலுக்கு வராவிட்டாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு வீரராகவரை தரிசித்து விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பம் கொடுத்தால் முன்னோர்கள் தங்களை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

அதன்படி மஹாளய அமாவாசை தினமான நேற்று திருவள்ளூர் மட்டுமல்லாது வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் வைத்திய வீரராகவப் பெருமாள் நோய் தீர்க்க வல்லவர் என்பதால் நோய் தீர வேண்டியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோயில் குளத்தில் வெள்ளம், பால் ஆகியவற்றை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

The post திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: