தே.ஜ. கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நீடிக்கும்: ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நீடிக்கும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். புதிய நீதிக்கட்சியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை வேலூர் டோல்கேட் தனியார் மண்டபத்தில் நடந்த மருத்துவ முகாமை புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை வாஜ்பாய் காலத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. நான் ஒருமுறை பாஜ சின்னத்திலும், ஒருமுறை அதிமுக சின்னத்திலும் வேலூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தேன். ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதேநேரத்தில் எம்பி என்பது நோக்கமல்ல. 3வது முறையும் மோடி பிரதமராக வேண்டும் என்பதுதான் முக்கியம். அதன் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தே.ஜ. கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நீடிக்கும்: ஏ.சி.சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: