கிண்டி கவர்னர் மாளிகையில் மகாத்மா காந்தி மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்பட கண்காட்சி: ஆளுநர் ஆர்என்.ரவி திறந்து வைத்தார்

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மத்திய மக்கள் தொடர்பு துறை சார்பில் நேற்று சென்னை கிண்டிலுள்ள ஆளுநர் மாளிகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்பட மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புகைப்பட கண்காட்சியில் மகாத்மா காந்தியின் இளமைப் பருவம், தந்தை, தாயார் மற்றும் சகோதரர்கள் இருக்கும் புகைப்படம், குழந்தை பருவத்தில் மகாத்மா காந்தி புகைப்படம், அவர் பிறந்த இடம், அவர் படித்த பள்ளி மற்றும் கல்லூரி, 1888ம் ஆண்டில் சட்டப் படிப்பை படிப்பதற்காக இங்கிலாந்து சென்ற புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, 1891ம் ஆண்டில் ஜூன் 10ல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற புகைப்படம், 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இனவெறிச் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களுக்கு தலைமை ஏற்ற காந்தியடிகளுடன் வாக்குவாதம் செய்யும் காவல்துறையின் புகைப்படம். 1917ம் ஆண்டு நடந்த சம்பாரன் சத்தியாகிரகப் போராட்டத்தின் புகைப்படம், குஜராத்தின் கீதா மாவட்டத்தில் காந்தியடிகளால் நடத்தப்பட்ட கேதா சத்தியாகிரகப் போராட்ட புகைப்படம், 1948 ஜனவரி 30ம் தேதி அன்று டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் வழக்கமாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது மகாத்மா காந்தி துப்பாக்கியால் சுடப்பட்ட புகைப்படம் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் புகைப்பட கண்காட்சியை சுற்றி பார்த்து ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடினர். நிகழ்ச்சியில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படாத வகையில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

The post கிண்டி கவர்னர் மாளிகையில் மகாத்மா காந்தி மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்பட கண்காட்சி: ஆளுநர் ஆர்என்.ரவி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: