இப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி கிடையாது. நாள்தோறும் விற்பனை பொருட்களை கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து விட்டு எடுத்து சென்று விட வேண்டும். ஆனால் இங்கு நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் சீசன் சமயங்களில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 120 கடைகள் அகற்றப்பட்டன.
சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் நிரந்தர கடைகள் கட்டி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் முதற்கட்டமாக 55 நிரந்தர கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இக்கடைகளை டெண்டர் விட கடந்த பிப்ரவரி மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் டெண்டர் விடப்படவில்லை.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் சிறு வியாபாரிகள் மீண்டும் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவற்றை கடந்த இரு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதனை ெதாடர்ந்து தங்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு காண கோரி கலெக்டர் அருணாவிடம் முறையிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் போில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி ஆர்டிஓ மகாராஜ் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய்த்துறையினர், நகராட்சி ஆணையர் ஏகராஜ் உள்ளிட்டோர் சாலையோர வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வியாபாரிகளுக்கு ஆதரவாக சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தாவரவியல் பூங்கா சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் வரை ஏற்கனவே இருந்த இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து கொள்ள வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கீடு செய்யும் வரை தற்காலிகமாக அனுமதி appeared first on Dinakaran.
