பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “உலக அளவில் பெருமை பெற்றவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவருமான, இந்திய வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன் வயது முதிர்வால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பேரன்பைப் பெற்ற M.S. சுவாமிநாதன், மத்திய திட்டக் குழு துணைத் தலைவர், திட்டக் குழு உறுப்பினர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்ததோடு; ‘பத்மபூஷன்’, “S.S. பட்நாகர்’, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ‘மகசேசே’ விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் பெற்ற போற்றுதலுக்குரியவர்.

இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய M.S. சுவாமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் துறையினருக்கும். வேளாண் மக்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: