ஊட்டியில் தொடர் மழை: தாவரவியல் பூங்கா மலர் தொட்டி பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை

ஊட்டி: ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வரும் நிலையில் தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வைகள் பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. இதனால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளை கொண்டு மாடங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 50,000 தொட்டிகளை கொண்டு சிறிய புல் மைதானத்தில் சந்திரயான் 3 ராக்கெட் போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மழையில் இருந்தும், நீர் பனியில் இருந்தும் மலர் செடிகளை பாதுகாப்பதற்காக பூங்காவில் பிளாஸ்டிக் போர்வைகள் கொண்டு மூடப்படுகிறது.

இதில், குறிப்பாக மழை காலங்களில், இந்த பிளாஸ்டிக் போர்வை செடிகளை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது சிறிய புல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 மலர் அலங்காரத்தை மழையில் இருந்து பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் போர்வைகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் இந்த மலர் அலங்காரங்களை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஊட்டியில் தொடர் மழை: தாவரவியல் பூங்கா மலர் தொட்டி பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை appeared first on Dinakaran.

Related Stories: