திருபுவனை, செப். 25: மதகடிப்பட்டில் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மாத்தூரை சேர்ந்தவர் சிவகுமார்(50). இவர் மதகடிப்பட்டில் கடந்த 10 வருடமாக தனியார் வாடகை கட்டிடத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 9.30 மணியளவில் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை ஸ்டூடியோவில் இருந்த 2 கேட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் இதனை பார்த்து திடுக்கிட்டு, சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், அங்கு வந்து பார்த்தபோது, ஸ்டூடியோவில் இருந்த 2 கேமராக்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும். இது குறித்த புகாரின் பேரில், திருபுவனை எஸ்ஐ கதிரேசன் தலையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மதகடிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மதகடிப்பட்டில் துணிகரம் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.