ரூ.6000 விலைபோகும் ஒருகூடை மொசப்பாறை ரூ.300 ஆனது கூவிக்கூவி விற்பனை செய்தும் மீன்களை வாங்க ஆளில்லை: காசிமேடு வியாபாரிகள் வேதனை

சென்னை: புரட்டாசி மாதம் என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் மீன்வரத்து அதிகம் இருந்தும் வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். சென்னையில் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதன் காரணமாக கடந்த வாரமும் மீன் மார்க்கெட்டுகளில் கூட்டமில்லாமல் இருந்தது. அதே நிலை இந்த வாரமும் நீடித்தது. மீன் விரும்பி உண்பவர்கள் கூட அதிக அளவு வாங்க நேற்று வரவில்லை. அதேபோல், சிறு, மொத்த வியாபாரிகளும் மீன் வாங்க ஆர்வம் காட்டவில்லை. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிரஷ்ஷாக பிடித்து வரப்படும் மொசப்பாறை என்ற மீன் ஒரு கூடை 18 கிலோ இருக்கும்.

அதன் விலை ரூ.6000 முதல் ரூ.7000 வரை விற்பனை செய்யப்படும். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும்கூட ஒரு கூடை மீனின் விலை ரூ.300 முதல் 400 என விற்பனை செய்யப்பட்டது. காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் நேற்று அதிகளவு மொசப்பாறை மீன்கள் விற்பனைக்கு வந்தது. அதேபோல் சங்கரா மீன் ரூ.400 முதல் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று ரூ.100 முதல் 150க்கு விற்பனை செய்யப்பட்டது. வஞ்சிரம் மீன் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

தற்போது 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் புரட்டாசி முடிய 3 வாரங்கள் உள்ளன. அதனால் இன்னும் போக போக இதே நிலை நீடிக்கும். இதுகுறித்து, மீனவர்கள் கூறும்போது, ‘‘டீசல் விலை உயர்வாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கடலில் நான்கு, ஐந்து நாட்கள் தங்கி மீன் பிடித்து வருகிறோம். வந்தாலும் எங்களுக்கு போதிய வருவாய் இல்லை. தற்போது புரட்டாசி மாசம் என்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடலில் மீன் பிடிக்க சென்று வந்த செலவை கூட சம்பாதிக்க முடியவில்லை’’ என்றனர்.

The post ரூ.6000 விலைபோகும் ஒருகூடை மொசப்பாறை ரூ.300 ஆனது கூவிக்கூவி விற்பனை செய்தும் மீன்களை வாங்க ஆளில்லை: காசிமேடு வியாபாரிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: