கடலூர், செப். 24: எந்த ஆவணங்களும் இல்லாமல் அரசு தரிசு நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா போட்டு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரை (ஆர்டிஓ) செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 185.96 ஏக்கர் தரிசு நிலத்தை, அரசின் ஒப்புதலின்றி நஞ்சை நிலமாக வகை மாற்றம் செய்ததுடன், எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுத்துள்ளதாக கூறி சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், இந்த பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், விரிவான விசாரணை நடத்தக் கோரியும், அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம். சுப்பிரமணியம், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை. எனவே, அந்த நிலத்தின் தற்போதைய நிலை குறித்து நில நிர்வாக துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பட்டா வழங்கி உத்தரவு பிறப்பித்த கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post அரசு தரிசு நிலத்தை தனி நபர்களுக்கு கொடுத்த விவகாரம்: கடலூர் ஆர்டிஓ நேரில் ஆஜராக வேண்டும் appeared first on Dinakaran.