வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்களை சீர் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு

 

மேட்டுப்பாளையம், செப்.11: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல முகூர்த்த தினங்களில் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகை தந்து கிடா வெட்டியும், மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சுப முகூர்த்த தினம் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாமாக முன்வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்களை சீர் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: