தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் ஆயிரமாவது குடமுழுக்கு விழா: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் 10ம் தேதி நடைபெறுகிறது; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 1,000வது குடமுழுக்கு விழா, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும். அதன்படி, அறநிலையத்துறை சார்பில் கடந்த 26 மாதங்களில் குடமுழுக்கு நடைபெறாத கோயில்களை கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 7,142 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 கோயில்களில் ரூ.1,120 கோடியிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்படி திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அனைத்து தரப்பினரும் போற்றிடும் வகையில் செயலாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா 1,000வது குடமுழுக்கு என்ற பெருமை பெற்றுள்ளது.

விழாவில் சமய சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள்,இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர்கோயில் குடமுழுக்கு வருகின்ற 10ம் தேதி விமரிசையாக நடக்க உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் ஆயிரமாவது குடமுழுக்கு விழா: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் 10ம் தேதி நடைபெறுகிறது; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: