தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு அமலானது

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு அமலானது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இதில் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.அதன்படி ஏற்கனவே 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலானது. மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி ஜீப், வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85லிருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.90 யாகவும், இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.135 வசூலிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒரு முறை சென்று வர கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.45 ஆகவும், இருமுறை பயணம் செய்ய ரூ.10 லிருந்து ரூ.65வும், மாதாந்திர கட்டணம் ரூ.235 லிருந்து ரூ.1,325தாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஒரு பகுதியாக மதுரை – தூத்துக்குடி பகுதியை பயன்படுத்துவதற்கான பயனாளி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் எலியார்பாத்தி சுங்க சாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதுர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் ரூ.85 லிருந்து ரூ.90 ஆகவும், இரு முறை சென்று வர ரூ.125 லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,505 லிருந்து ரூ.2,740யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.145லிருந்து ரூ.160, இரு முறை சென்று வர ரூ.220லிருந்து ரூ.240 ஆகவும் மாதாந்திர கட்டணம் ரூ.4,385 லிருந்து ரூ.4,800யாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூ.290 லிருந்து ரூ.320, இரு முறை சென்று வர ரூ.440 லிருந்து ரூ.480 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8,770 லிருந்து ரூ.9,595யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூ.470 லிருந்து ரூ.515 யாக உயர்த்தப்பட்டுள்ளது.

இருமுறை சென்று வர கட்டணம் ரூ.705 லிருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14,095 லிருந்து ரூ.15,420 யாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் பல முறை பயணங்களில் பாஸ்டேக் பயனாளிகளுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை அமலாகும். சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ. சுற்று வட்டாரத்திலுள்ள வணிக உபயோகம் இல்லாத கார், பயணிகள் வேன் அல்லது ஜீப் மாதாந்திர நுழைவுச்சீட்டு ரூ.150 மற்றும் சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ.க்கு மேற்பட்ட 20 கிலோ மீட்டருக்கு உள்ளாக சுற்று வட்டாத்திலுள்ள கார், பயணிகள் வேன், ஜீப்களுக்கு மாதாந்திர நுழைவுச் சீட்டு ரூ.300 வசூலிக்கப்பட உள்ளது.

The post தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு அமலானது appeared first on Dinakaran.

Related Stories: