காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார் கோவில் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது 9-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இவை ஐம்பொன் சிலைகள் என தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக நேற்று பள்ளம் தோண்டும் போது ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது.

அதனை தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து 5 சுவாமி சிலைகள் கிடைத்தது. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி தலைவர் வாசுகி சோழன், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதா, சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமாருக்கு ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சுவாமி சிலைகளை பார்வையிட்டனர். சிவன், பார்வதி, ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பீடத்துடன் பஞ்சமூர்த்தி, இடம்புரி விநாயகர் உள்ளிட்ட சிலைகள் கிடைத்தது. தகவலறிந்த கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி பணியை தீவிரப்படுத்தினர்.

அதில் பலனும் கிடைத்தது. நடராஜர், சோமஸ்கந்தர், நடன சம்மந்தர், சண்டீகேஸ்வரர் ஆகிய சிலைகள் கிடைத்தது. மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டி வருகிறார்கள். இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண் தோண்டும் போது கிடைத்த சிலைகள் சுமார் 300 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள், தொன்மையான சிலைகள் எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்தை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்து தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொல்லாப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான சிலைகள் கூட இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: