ஓணம் பண்டிகையையொட்டி பழைய மூணாறில் சிறுவர் பூங்கா திறப்பு

மூணாறு: ஓணம் பண்டிகையையொட்டி, பழைய மூணாறில் ஹைடல் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள பழைய மூணாறில், ஹெட் ஒர்க்ஸ் அணையை ஒட்டி 8 ஏக்கர் பரப்பளவில் ஹைடல் பார்க் உள்ளது. இந்த பூங்காவை மின்வாரியத்தினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள சிறுவர் பூங்காவில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் தலைமையில், ரூ.3.65 கோடியில் சிறுவர்களுக்கான 14 வகையான பொழுது போக்கு அம்சங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பகுதி, இருக்கைகள், செல்பி பாயின்ட், பூந்தோட்டம் மற்றும் ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய மூணாறில் உள்ள ‘டேக் எ பிரேக்’ முதல் ஹைரேஞ்ச் கிளப் தொங்கு பாலம் வரை 450 மீட்டர் தூரத்திற்கு முதிரப்புழை ஆற்றின் கரையில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மூணாற்றின் அழகையும், குளிரையும் ரசிக்கும் வகையில் இந்த ஆற்றங்கரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பூந்தோட்டங்கள், மின்அலங்காரங்கள் மற்றும் இருக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்காவை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் ரூ.25 வசூலிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூங்கா மற்றும் நடைபாதை திறக்கப்படும் என டி.டி.பி.சி செயலாளர் ஜிதேஷ் ஜோஸ் தெரிவித்தார்.

The post ஓணம் பண்டிகையையொட்டி பழைய மூணாறில் சிறுவர் பூங்கா திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: