வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு தார்ச்சாலை அவசியம்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

வருசநாடு, ஆக. 12: வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது காந்திகிராமம், முத்துநகர், ஐந்தரைபுலி ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கொட்டைமுந்திரி, இலவம்பஞ்சு, பீன்ஸ், அவரை, கத்தரி, தக்காளி போன்றவை விவசாயம் செய்யப்படுகின்றன. மேலும் கால்நடைகள் வளர்ப்பும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக சாலை வசதியின்றி உள்ளது.

இதன் காரணமாக தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு தலைச்சுமையாக ரேசன் பொருட்களை பொதுமக்கள் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த வழியாக பள்ளி மாணவ, மாணவிகளும் தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி, கிராமசபை கூட்டங்களிலும், மாவட்ட ஆட்சி அலுவலங்களிலும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இது குறித்து காந்திகிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், ‘‘விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு தார்ச்சாலை அவசியம்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: